“வாரம் மூணு தடவையாவது போன் பண்ணிடுவான் தம்பி விவேக், இந்த வாரம் ஒரு தடவை கூட போன் பண்ணலையே, என்னவா இருக்கும்?”, என்று தன் குறுந்தாடியை தடவியபடி சாய்வு நாற்காலியில் வசதியாக சாய்ந்துக்கொண்டான் விவேகானந்தன், ஒரு பெரிய எழுத்தாளர் ,நந்தன் என்ற புனைப்பெயரில் எழுதி வருகிறான்.
ஒரு முறை தன் அருகில் இருந்த அலைப்பேசியை எடுத்து மிஸ்ட் கால்ஸ் ஏதேனும் வந்திருக்கிறதா என்று பார்த்துக் கொண்டான்.” ஒரு வேலை மூன்று நாட்களுக்கு முன்பு குளியலறையில் கை தவறி விழுந்ததால், ஏதாவது ஆகியிருக்குமோ”, என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டான் நந்தன்.
பின்பு சுவற்று ஹாங்கரில் மாட்டியிருந்த சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு, கைப்பேசியையும் எடுத்துக் கொண்டு, தனது ஸ்பெலன்டரை, தனது நண்பன் கடைத்தெருவில் வைத்திருக்கும் மொபைல் சர்வீஸ் சென்டருக்கு சென்றான்.
இவனை கண்டதும் குனிந்து ஒரு மொபைலுக்கு ஆபரேஷன் செய்து கொண்டிருந்த அசோக்,”வாடா ரைட்டர் நந்தா பார்த்து நாளாச்சு என்ன விஷயம்”, என்றான்.”ம்ம்ம்.. எப்படி இருக்கடா, அது ஒரு மூணு நாளைக்கு முன் இந்த போன் கீழே விழுந்துட்டு, கொஞ்சம் என்னன்னு பாருடா,” என்றான் நந்தா.
“அதான காரணம் இல்லாம நம்ம ரைட்டர் வரமாட்டாரே, ஆமா ஏன்டா ஆள் டல்லா இருக்க,” என்று அசோக் கேட்க. ஆமாடா உனக்கு தெரியுமே என் தம்பி விவேக் ஊட்டில மியூசிக் டீச்சராக வேலை பார்க்கிறானே, அவன்கிட்ட இருந்து இந்த வாரம் போனே வரலடா, என் போன் பிரச்சனையா இல்ல அவன் பண்ணலயான்னு தெரியில, மனசு கஷ்டமா இருக்கு”, என்றான் நந்தா.
“டேய், அதான் போன் நாலு நாளா வேலை செய்யலேன்னு நீயே சொல்ற அப்புறம் எப்படி போன் வரும், கவலைப்படாதே இரு நான் என்னன்னு பார்க்கிறேன் “, என்று அசோக் கூறியப்படி அவன் போனுக்குள் தலையை நுழைக்க, நந்தா டென்ஷனோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அசோக் அவனது தலையை வெளியே எடுத்து,”மாப்பிள ஸ்பீக்கர் முடிஞ்சிது, பெட்டெர் நீ பேசாம இத நம்பாத வேற ஒரு புது போன் வாங்கிடு, நம்ம காலேஜ் ஜூனியர் சண்முகம்தான் பக்கத்துல மொபைல் கடை வச்சிருக்கான், வா போய் பாப்போம் , நா இத இரண்டு நாள்ல சரி செய்ய பாக்கறேன்”, என்றான்.
அதுவும் சரியாக படவே, நந்தா தலையாட்டியப்படி எழுந்தான். அவனது வண்டியிலேயே சென்று மொபைல் வாங்கி , திரும்பி வந்து அசோக் அவனது கடையில் இறக்கி விடும் போது,”டேய் எப்படியாவது அதை சீக்கிரம் சரி செய்து ஏதாவது தகவல் இருந்தா சொல்லுடா,” என்று கூறியப்படி அவன் வீடு நோக்கி சென்றான்.
வீட்டுக்குள் நுழையும்போதே அவனது புது போன் சிணுங்கியது, வார இதழ் எடிட்டர்,” என்ன நந்தா சார் மூணு நாளா ட்ரை பண்றேன், இப்பதான் பேச முடியுது என்ன பிஸியா சார், உங்க மௌனம் கலைகிறது தொடர் முடியும் தருவாயில் இருக்கு, எப்ப அடுத்த தொடர் தரீங்க, ரெடியா இருக்கா இல்ல இனிமே தான் எழுதுனுமா, அப்படி எழுதறதா இருந்தா த்ரில்லர் ட்ரை பண்ணுங்க சார், நேயர்கள் இப்ப அததான் விரும்பறாங்க,” என்று ஒரே மூச்சாக பேசி முடித்தார். மேலும் பேச இஷ்டமில்லாத நந்தா ,”ஓகே சார் “, என்று போனை வைத்தான்.
ஒரு குளியல போட்டுட்டு,ஒரு காப்பியோட கதைக்கான லீடை யோசிப்போம், என்று நினைத்து குளிக்க சென்றான். சிறிதுநேரத்தில் மேஜை மேல் இருந்த போன் சிணுங்க, எடுக்காததால் ஐந்து முறை சிணுங்கி விட்டு அமைதியானது. குளித்து முடித்து சூடான காப்பியோடு மேஜை அருகே வந்தவன், உலகத்திலுள்ள அனைத்து மொபைல் வாசிகளும் செய்வது போல், ரிங்கே வராத மொபைலை எடுத்து ஆன் செய்து பார்த்தவன், ஐந்து மிஸ்ட் கால்ஸ் அசோக் இடமிருந்து வந்திருப்பதை பார்த்ததும் சற்று கலக்கமடைந்தான், நிச்சயம் ஏதாவது முக்கியமான விஷயமாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்து, அவனை அழைத்தான்.
இதனிடையே காலிங் பெல் அழைக்கவே, கதவை திறந்த நந்தா தான் அழைக்கும் நண்பன் அசோக் நேரில் மொபைலை கையில் வைத்தப்படி நின்றிருப்பதை பார்த்து அதிர்ச்சியோடு,”வாடா”, என்றான். “ஏண்டா எத்தன தடவ கூப்பிடறது, எங்கே போன, சரி, உன் மொபைல் செக் பண்ணினேன், அதில விவேக்கிடமிருந்து மூணு மிஸ்ட் கால்ஸ், இரண்டு வாய்ஸ் மெசேஜ் வந்திருக்கு,நீ அத அவசியம் கேட்கனும்’, என்று கூறி ப்ளே செய்தான்.
முதல் வாய்ஸ் மெசேஜ்: “அண்ணா , ஏன் கால் பண்ணா எடுக்கல,மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு, ஒரு முக்கியமான விஷயத்தைப்பற்றி உன்கிட்ட பேசணும், ஊருக்கு வரலாம்னு இருக்கேன், இப்ப ஊட்டி ரயில்வே ஸ்டேஷன்ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன், ஆங்.. ட்ரைன் வந்திட்டு, நேரா பேசலாம்,”
இரண்டாவது வாய்ஸ் மெசேஜ்: அ....அ...அண்ணா..., என்ன ஒருத் .....அய்யோ அண்ணா, என்ன காப்பாத்.......ஆ...ஆ”,.அவ்வளவு தான் பயங்கரமான இரைச்சல் சத்தத்தோடு வாய்ஸ் மெசேஜ் முடிந்தது.
கேட்டதும் இருவரும் வேர்த்திருந்தனர். காபி சில்லிட்டு ஆறிப்போயிருந்தது. நந்தனுக்கு இரண்டாவது மெசேஜ் மனதை பிசைந்தது. “இரண்டு நாளுக்கு முன்பு வந்த மெசேஜ் ,இந்நேரம் விவேக் வீடு வந்திருக்க வேண்டியவன், அவனுக்கு என்ன நடந்திருக்கும்,அய்யோ விவேக் நீ எங்கடா இருக்க ,உனக்கு என்னாச்சிடா,” என்று தலையை பிடித்துக்கொண்டு நந்தா கட்டிலில் அமர்ந்தான்.
“டேய், நந்தா நீயே இப்படி இடிஞ்சி போய்ட்டா எப்படிடா, தைரியமா இரு,என்னன்னு பாக்கலாம்,” என்று கூறி அவனது தோளைப்பிடித்து சமாதானம் படுத்தினான் அசோக்.
“டேய், முதல் வாய்ஸ் மெசேஜ் நல்ல பேசியிருக்கான், அது மாலை 6:10க்கு ரெகார்ட் ஆயிருக்கு, உன்கிட்ட பேசும்போது ட்ரைன் வந்திட்டு என்று சொல்லியிருக்கான், இரண்டாவது வாய்ஸ் மெசேஜ் அனுப்பினது 6:50 மணிக்கு, ஊட்டி டு ஈரோடு க்கு 6:30 மணிக்கு ட்ரைன். அவன் ஏறின 40 நிமிஷத்துல ஏதோ நடந்திருக்கு, என்ன ஒருத்.. என்று சொல்லியிருக்கான், அது ஒருத்தனா, ஒருத்தியா ன்னு தெரியல, ஒருத்தனா தான் இருக்கணும்,நிச்சயமா இவன ஏதோ பண்ணும்போது தான் விவேக் கத்தியிருக்கான்,” என்று இவனது கணிப்பை தெரிவித்தான் அசோக்.
“எனக்கு தலையே சுத்துதுடா, என்ன பண்றதுன்னே தெரியல,” என்று அழத் தொடங்கினான். உடனே அசோக்,”டேய் இப்படி அழுகறதால ஒன்னும் ஆகப்போறதில்ல, நீ பேசாம கதை எழதற சாக்கில ஊட்டிக்கு போய் என்ன நடந்ததுன்னு கண்டுபிடி, விவேக் தங்கியிருந்த இடத்துல நிறைய அறைகள் இருக்கு நாம போனா தங்கலாம்ன்னு சொல்லியிருந்த, ஞாபகம் இருக்கா, போய் என்னன்னு பாரு நேரத்த தள்ளிப்போடறது புத்திசாலித்தனம் இல்லடா, உடனே கிளம்பு, நா வந்து பஸ் ஏத்தி விடறேன் ”, என்று கூற, அசோக் சொன்னது சரி என்று நந்தா முடிவெடுத்து தனது துணிகளை பெட்டியில் அடைத்தான். தான் எழுதுவதற்கு தேவையானதை ஒரு தோள் பையில் மாட்டிக் கொண்டு, வீட்டை பூட்டி விட்டு அசோக் வண்டியில் ஏறினான்.
விடியற்காலை ஊட்டி வந்து சேர்ந்தான்.ஊட்டி பனியை போர்த்திக்கொண்டு, விலக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது. “நல்ல வேலை மேட்டுப்பாளையம் நெருங்கியதும் ஸ்வட்டர், குல்லாவை போட்டுக் கொண்டதால் தப்பித்தான் நந்தா.
வண்டியை விட்டு இறங்கியவன் ,தனது தம்பி கடைசியாக வந்து தனக்கு வாய்ஸ் மெசேஜ் மற்றம் போன் செய்த இடம் என்று எண்ணுகையில் தொண்டை அடைத்து கண்ணீர் பெருகியது.
நந்தா காலேஜ் படிக்கும் போது,விவேக் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். பன்றி காய்ச்சளால் அப்பா பாதிக்கப்பட்ட போது ,அவரை கவனித்துக் கொள்ள அம்மா மருத்துவமனையில் இருந்ததால், நந்தாவுக்கும் விவேகிற்க்கும் ஆன நெருக்கம் அதிகமானது.
இந்நிலையில் ,அப்பாவுடன் இருந்த அம்மாவுக்கும் காய்ச்சல் ஒற்றிக் கொள்ள, முதலில் அப்பா இரண்டு நாள் கழித்து அம்மா என்று இருவரும் இறைவனடி சேர, நந்தா விவேக்கிற்கு தாயும் தந்தையுமானான்.விவேக் படிப்பிற்காக நந்தா காலேஜ் விட்டு நின்று அருகிலிருந்த லைப்ரரியில் வேலைக்கு சேர்ந்தான்.
தனது முழு நேரமும் புத்தகங்களோடு செலவிட தொடங்கிய நந்தா, சிறு சிறு பத்திரிக்கைகளில் கவிதை, கட்டுரை, சிறு கதைகள் என்று எழுதி, அப்படியே முழு நேர எழுத்தாளனாக மாறி, தன் தம்பி விரும்பிய இசையில் பட்டம் வாங்க பக்கபலமாக இருந்தான் , கடந்த இரண்டு வருடங்களாக ஊட்டியில் ஒரு பெரிய பள்ளியில் மியூசிக் டீச்சராக பணியாற்றிவந்தான்.
வருடம் இரண்டு முறை நந்தாவை பார்க்க வந்துவிடுவான் விவேக். வாரம் மூன்று அல்லது நான்கு முறையாவது போன் செய்து பேசிவிடுவான். ஆனால் இன்று தனக்கென்று இருந்த தம்பி என்ற சொந்தம் என்னவானது என்று தெரியாமல் கலங்கி அப்படியே பிளாட்பாரம் பெஞ்சில் அமர்ந்திருந்தான்.
தனது பாக்கெட்டில் உள்ள போன் சிணுங்க எடுத்தான், அசோக்,” டேய் , நந்தா நீ ஊட்டி போய் சேர்ந்திட்டியா, பாத்து கவனம்டா , நீ யார்ன்னு காட்டிக்காதடா,” என்று கூற ,அதற்கு நந்தா,”ம்ம்...” என்று கூறி போனை பாக்கெட்டுக்குள் வைத்தான்.
கல்வி சுற்றுல்லா வந்த பள்ளி குழந்தைகள், தேனிலவு தம்பதியினர்கள்,குடும்பத்தோடு வந்தவர்கள் என்று தன்னை தவிர அனைவரும் சந்தோஷமாக இருப்பதைப்போல உணர்ந்தான். யாரையும் கவனிக்க மனம் விரும்பாமல், வெளியே வந்து ஒரு ஆட்டோவை அழைத்தான்.
செல்லும் இடத்தை குறிப்பிடவும் ஆட்டோ வேகமெடுத்தது. வழி நெடுகிலும் பனி போர்த்தி தூக்கம் கலையாத அழகிய குழந்தை போல் காட்சி அழித்ததாலும்,அதன் அழகை ரசிக்க மனம் வராமல் சாலையையே வெறித்துப் பார்த்து வந்தான் நந்தா.
விவேக் தங்கியிருந்த வீட்டின் அருகே ஆட்டோ நெருங்க, இறங்கினான், இதயம் கனத்தது. மெல்ல அந்த வீட்டின் கேட்டை திறக்க ஒரு குட்டையான மப்ளர் மற்றும் ஸ்வட்டர் போட்ட உருவம்,”யாரது,” என்றது.
“என் பெயர் வெங்கடேஷ் ஈரோடு அருகிலிருந்து வருகிறேன் நான் ஒரு எழுத்தாளன். இங்கு தங்கி கதை எழுதலாம் என்று வந்தேன். இங்கு வாடகைக்கு வீடு இருக்குன்னு சொன்னாங்க அதான்....”, என்று இழுத்தான் வெங்கடேஷ் என்ற நந்தா.
இவனை மேலும் கீழும் ஒரு முறை பார்த்து விட்டு,”ம்ம்..சரி அந்த ஹால்ல உட்காருங்க, வரேன் என்று கூறி விட்டு சென்றார்.
கண்ணாடியை துடைத்து மாட்டிய நந்தா,”சார் உள்ள வாங்க “, என்று குரல் அழைக்க உள்ளே சென்றான். தான் வெளியில் பார்த்த அந்த நபர், வெள்ளை வேஷ்டி சட்டை விபூதி பட்டை சகிதம் அமர்ந்திருந்தார்.”சார், நா நேரா விஷயத்துக்கு வரேன், பணம் விஷயத்துல நா கரெக்டா இருப்பேன். இங்கு பத்து அறைகள் இருந்தாலும், தற்போது உங்களையும் சேர்த்து மூணு அறை தான் வாடகைக்கு விட்டிருக்கேன். அதுலேயும் ஒரு அறை மூணு நாளா பூட்டியே இருக்கு, அந்த மியூசிக் சார் எங்க போனாலும் சொல்லிட்டு தான் போவார்.போனும் சுவிட்ச் ஆப். இத மாதிரி சில கேஸ் இருக்கறதால அட்வான்ஸ் 20,000ரூபாய் மாச வாடகை 2௦௦௦, ஓகேன்னா சொல்லுங்க ரூம் ரெடியா இருக்கு,” என்றார்.
மியூசிக் சார் விஷயத்தில் கவனம் செலுத்தியவன், தீடீரென்று நினைவு வந்தவனாக ,”ஆங்.. ஒகே சார், எவ்வளவு அட்வான்ஸ் என்று திரும்ப கேட்டு கொடுத்து விட்டு சாவியை வாங்கினான்.
“வாங்க உங்க ரூமை காட்றேன்”, என்று கூறி தொடர்ந்து வந்தவர், ஒரு ரூமை கடக்கையில்,”இது தான் சார் அந்த மியூசிக் சார் ரூம்,” என்றார். தான் ஒரு முறை இரவில் வந்து விடியற்காலையில் ஊட்டியை சுற்றி காண்மித்து, மாலை பஸ் ஏற்றி விட்டான் விவேக்,அந்த ஞாபகம் வர, அந்த ரூமையே பார்த்தான்,”என்ன சார் பூட்டிய ரூமை அப்படி பார்க்கறீங்க , அந்த விவேக் சார் பற்றி அப்புறம் சொல்கிறேன், நீங்க ரூம்க்கு போய் பிரெஷ் ஆயிட்டு வாங்க, பக்கத்தில இருக்கிற கடையை காட்றேன்,” என்று கூறி விட்டு சென்றார்.
விவேக்கை பற்றி சொல்கிறேன் என்ற வார்த்தை அவனுக்கு தெம்பை கொடுத்தது. குளித்து உடை மாற்றி அறையை விட்டு வெளியே வந்தான் நந்தா.
பூட்டியிருந்த விவேக்கின் அறையை ஏக்கமாய் பார்த்தப்படி நிற்க,” ஒரே பொண்ணுன்னு செல்லமாக வளர்த்தீங்க,இப்ப பார்த்தீங்களா ஊரு என்ன சொல்லுதுன்னு,” என்று வயது முதிர்ந்த ஒரு பெண்மணி கிணற்று சுவற்றில் அமர்ந்திருத்த அவள் வயது ஒத்த நபரிடம் உரிமையுடன் திட்டிக்கொண்டிருந்தாள். அவளது கணவன் போலும்). “அம்மா நீ சும்மா இருக்க மாட்டியா, இங்க வா,”என்றபடி ஒரு வாலிபன் அப்பெண்மணியை உள்ளே அழைத்து சென்றான்.
“என்ன சார் இவங்க பிரச்சனையா, இது இரண்டு நாளா நடக்குதுசார், கடை பக்கமா தான் இருக்கு வாங்க நடந்தே போகலாம்,”என்று சொல்லியப்படி கேட்டை திறந்தார். திரும்ப கேட்டை மூடியவரிடம், நந்தா,” என்ன சார் அங்க என்னாச்சி?” என்று கேட்டான்.
“ஆங் அதுவா சார் அவங்களுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன் , அந்த பையன தான் பார்த்தீங்களா, அந்த பொண்ணு பேர் யாமினி பக்கத்துல இருக்கிற ஸ்கூல்ல டான்ஸ் டீச்சர் ஆக வேலை பார்த்து வந்தது, உங்க ரூம் பக்கத்துல விவேக் என்று ஒரு சாரைப் பற்றி சொன்னேன் இல்ல ,அவரும் இந்த பொண்ணு யாமினியும் விரும்பினாங்க. சினிமா ல்ல வரும் வில்லன் போல, இவுங்க காதலுக்கு அந்த பொண்ணோட தூரத்து சொந்தம் மாமன் முறை இந்த ஊர் CI(சர்கிள் இன்ஸ்பெக்டர் ).பிரச்சனை பெருசா ஆகவும் ,CI வந்து விவேக்கிடம் பேசிட்டு போனான்.விவேக்கும் கிளம்பி ஊருக்கு போனான், ஆனா திடீரென்று அந்த பொண்ணு ரெண்டு நாளைக்கி முன்னால, அந்த கிணத்துல விழுந்து தற்கொலை செய்துக் கொண்டாள், ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு போன அந்த பையனும் மூணு நாளா ஆளை காணோம், அவன் ஸ்கூலில் இருந்து ஆள் வந்து என்ன கேட்டுட்டு போறாங்க, அவர் போன் வேற சுவிட்ச் ஆப் ல இருக்கு, பாப்பேன் இன்னுமிரண்டு நாள்ல அந்த சார் வரலைன்னா, ரூமை காலி பண்ணி வேற யாருக்காவது வடைகைக்கு விட வேண்டியது தான்.” என்று ஒரே மூச்சாக சொல்லி முடிக்கவும், கடை வரவும் சரியாக இருந்தது.
“ஏய்! முருகேசா, சார் வெளியூர், நம்ம காலனில தான் வாசம், சாப்பாடு விஷயத்த பத்தி பேசிக்கோ”,”அப்ப சார் நா வரேன் வேலையிருக்கு”, என்று கூறியப்படி கடையை கடந்தார். முருகேசன்,”வாங்க சார் நம்ம கடை கட்டன் சாயாவை குடிங்க, அப்புறம் சார் என்ன விஷயமா வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலமா”, என்று கேட்டபடி அருகில் அமர்ந்தான்.சற்று சுதாரித்துக்கொண்டு,”அது.. நான் ஒரு எழுத்தாளன், தொடர் கதைகள் எழுதிட்டு வரேன், புது கதை எழுத வந்திருக்கிறேன்,” என்றான் நந்தா.
“எழுத்தாளரா சார் சூப்பர் சார்,எனக்கு எழுத படிக்க தெரியாது சார், ஆனா உங்கள மாதிரி படித்த ஆள்களோடு பழக பிடிக்கும் சார், உங்களுக்கு இந்த ஊட்டில என்ன உதவி வேணும்னாலும் என்ன கேளுங்க சார், நா இருக்கேன்,அப்புறம் அந்த காலனியில உள்ள எல்லாருமே இங்க தான் சார் சாப்பிடுவாங்க, சாப்பாடு சூப்பரா இருக்கு கவலைப் படாதீங்க சார்,” என்று மிகுந்த உற்சாகத்தோடு கூறினான்.
விஷயம் கேட்டறிய ஆள் கிடைத்த சந்தோஷத்தில், நந்தா கட்டன் சாயாவை ருசிக்கலானான். வந்த அன்றே ஆரமிக்க வேண்டாம் என்றெண்ணி கட்டன் சாயாவுக்கான சில்லறையை கொடுக்க பர்ஸை துழாவிக்கொண்டிருந்தான்.
அப்போது முருகேசன் ,” சார், கொஞ்சம் இந்த பக்கம் தள்ளி வாங்க சார், நம்ம ஊர் CI வராரு,”, என்றான். விறு விறுவென்று ஜீப்பை விட்டு இறங்கி கடை நோக்கி வரும் அவன் நல்ல உயரம், சிவந்த நிறம், போலீஸ் உடுப்பு அவனுக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தது, ஆ னால் கண்களில் திமிர் நன்கு தெரிந்தது. CI யை ஓவர் டேக் செய்வது போல், போலீஸ் ஜீப் டிரைவர் மிகவும் பணிவுடன் ஓடி வந்து,” கோவிந்தா, சாருக்கு ஸ்ட்ரோங் டீ”, என்று கூறுவதற்கு முன்பே கோவிந்தன் தயார் செய்துக் கொண்டிருந்தான்.
டீ போட்டதும் அதை வாங்கி வளைந்து சென்று CIயைஇடம் கொடுத்தான் ஜீப் டிரைவர். உணவகத்தில் புகை பிடிக்க கூடாது என்று தெரிந்தும் புகை பிடிக்கும் CI டீயை வாங்கி குடித்ததும். விறு விறுவென்று ஜீப் நோக்கி சென்றார். அவரை தொடர்ந்து ஜீப் டிரைவரும்.
“என்ன கோவிந்தா குடித்த டீக்கு காசு கொடுக்காமல் போறார், நீயும் ஒன்னும் கேக்காம இருக்கீங்க”, என்றான். அதற்கு,கோவிந்தன்,”சார்,வந்தாரா டீயை குடித்தாரா, ஒன்னும் பிரச்சனை பண்ணாம போனாரா, அதுவே பெரிய விஷயம் சார், சரியான சிடுமூஞ்சி சார் , அதனால் தான் என்னவோ அந்த பொண்ணு யாமினி இவரை கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு தற்கொலை பண்ணிக்கிட்டு,”என்று கூறி விட்டு டீ கிளாஸ கழுவ ஆரமித்தான்.
மேலும் அதைப்பற்றி கேள் என்று மனசு சொன்னாலும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று மனசுக்குள் நினைத்து விட்டு, “சரி கோவிந்தா ராத்திரிக்கு பார்சல் வாங்கிட்டேன், நாளை காலை பார்க்கலாம்,” என்று கூறி விட்டு CI யை பற்றி நினைத்தவாறு ரூம் நோக்கி சென்றான் நந்தன்.
படுக்கையில் படுத்திருந்த நந்தனுக்கு CI யின் முகம் வந்து போனது, அவன் சரியில்லை என்று மனம் சொன்னது. தன் அடுத்த கதைக்கு கரு கிடைக்க வில்லை, தம்பியை பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்று நினைத்தப்படி உறங்கிப் போனான்.
காலை எழுந்து குளித்து நேராக கோவிந்தன் கடைக்கு சென்றான் நந்தா. இன்று எப்படியும் விவேக் பற்றி விஷயங்களை கேட்டறிய வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
கடை வாசலிலேயே கூட்டம் அதிகமாக இருந்தது.அனைவரும் அன்றைய செய்தித்தாளை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். நேரே உள்ளே சென்ற நந்தன்,” தம்பி மூணு இட்லி”, என்று கூறி விட்டு அமர்ந்தான்.
இட்லி சாப்பிட்டு, கை கழுவி கோவிந்தனிடம் வந்தான் நந்தன்,”சார் வந்திடீங்களா, கூட்டம் அதிகம் அதான் கவனிக்கல சார், நீங்க தங்கியிருந்த காலனில, விவேக்குன்னு ஒரு சார் , வீட்டுக்கு போறேன்னு போனாரு சார் ,நேத்து பேப்பர்ல அடையாளம் தெரியாத பிணம் கோவை சென்ற ரயில் பெட்டியில் கிடைத்தது என்று வந்தது ,இன்று நியூஸ்ல அந்த பாடி விவேக் சாரோடதுன்னு அவரோடு வேலை பாத்தவங்க சொல்லியிருக்காங்க,என்ன கொடுமை சார் நல்ல பையன் சார்,” என்று கூற, அப்படியே அருகிலிருந்த பெஞ்சில் அப்படியே உறைந்து போனான் நந்தன்.
அதை பெரிதாக பொருட் படுத்தாமல் கோவிந்தன், “ஊட்டியி லிருந்து பாடி வந்ததால், அவர ஊட்டி அரசு ஹாஸ்பிடலுக்கு கொண்டு வந்திருக்காங்கலாம் சார்,” ம்ம்.. என்னத்த சொல்ல.” என்று கூறியப்படி “மூணு இட்லியா சார் குறிச்சி வச்சிக்கிறேன்,” என்றான்.
“டேய்,விவேக் உனக்கா இந்த நிலமை”, என்று நினைத்த நந்தனுக்கு கண்கள் குளம் கட்ட,தனது மூக்கு கண்ணாடியை போட்டு அழுகையை மறைத்து கடை வெளியில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அப்படியே அமர்ந்திருந்தான். அப்படியே சற்று நேரம் அமர்ந்தான் ,கூட்டம் கலைந்ததால், கோவிந்தன் அவனது காலை உணவை உண்ண ஆரமித்தான், உணவு முடித்து வந்து கையில் காப்பியோடு அவனது இருக்கைக்கு வந்தவனை பார்த்து, நந்தன்,” கோவிந்தா இந்த விவேக் பற்றி கொஞ்சம் சொல்லேன் கேட்போம்,” என்று கேட்க. “அதுவா சார், அதுக்கென்ன சார், சார் விவேக் ரொம்ப நல்ல மாதிரி, அவர் உங்க காலனி பக்கத்துல்ல உள்ள வீட்டில் யாமினி என்ற பெண்ணை காதலித்தார் சார், முதல்ல அவுங்க அப்பா , அம்மா மறுத்தாலும் பின்பு ஒத்துக்கிட்டாங்க, அந்த பொண்ணுக்கு தூரத்து சொந்தம் தான் இந்த CI ஆள் சரியில்லாதவன் சார், அந்த பொண்ண ரொம்ப டார்ச்சர் பண்ணுவான் சார்,ஒரு கட்டத்துல்ல இவுங்க காதல் விவகாரம் தெரிஞ்சி , விவேக் சார்கிட்ட போய் சண்டை போட்டிருக்கான்.அந்த விவேக் சார்க்கு ஒரு அண்ணன் இருப்பதாக சொல்றாங்க அவர்கிட்ட போய் சம்மதம் வாங்க தான் அவர் ஊருக்கு போனார் சார், இந்த சமயத்த பயன்படுத்தி C I அந்த பொண்ண கல்யாணத்துக்கு வற்புறுத்த, அந்த பொண்ணு கிணத்துல விழுந்து தற்கொலை பண்ணிகிட்டதுன்னு சொல்றாங்க, எனக்கு என்னமோ இவன் மேல தான் சந்தேகமா இருக்கு சார், ஆங்.. அதோ போறானே அவன் பீட்டர் சார் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் மார்ச்சுவரில தான் வேலை செய்றான்,அவன்கிட்ட கேட்டா தகவல் சொல்வான், என்ன அவன கொஞ்சம் கவனிக்கணும் , என்ன சார் புது தொடருக்கு கரு கிடைச்சிட்டா சார்,” என்றான்.
“ம்ம்ம்.., கிடைச்ச மாதிரி தான்”, என்று கூறியபடி பீட்டர் நோக்கி சென்றான் நந்தன். தனது கையை பேன்ட் பாக்கெட்டுக்குள் விட்டு, ஓட்டமும் நடையுமாய் சென்று கொண்டிருந்தான் பீட்டர். அவனது வேகத்திற்கு ஈடு கொடுத்து நந்தனும் ஓடினான். “அப்பா ,இன்னைக்கு குளிர் கொஞ்சம் அதிகம் இல்ல பீட்டர்”, என்று கேட்டபடி ஒரு சிகரெட் எடுத்து பற்றவைத்தான் நந்தா.
இதுவரை பார்க்காத நபர் என்றாலும், சிகரெட்டை பார்த்ததும்,”ம்ம்.. ஆமா சார் “, என்றான். அவன் சிகரெட்டை பார்த்த பார்வையை புரிந்துக் கொண்ட நந்தன், “சிகரெட்”, என்று அவனிடம் ஒன்றை நீட்டினான்.
முன் பின் தெரியாத நபராக இருந்தாலும்,சிகரெட் என்றதும் ஒன்றுக்கு பதிலாக இரண்டு எடுத்த பீட்டரைப் பற்றி நன்கு அறிந்துக்கொண்டன் நந்தன்.சிகரெட்டை பற்றவைத்தப்படி,”ஊருக்கு புதுசா சார்”, என்றான் பீட்டர். “ஆங்..அதெல்லாம் இல்ல கொஞ்ச நாள் வெளியூரில் இருந்தேன், அப்பறம் மார்ச்சுவரியில் நல்ல கூட்டம் போல”, என்றான்.”ஆமா சார், விவேக் சாரோட பாடி வந்திருக்கு, அவரை பார்க்க ஸ்கூல் டீச்சர்ஸ் எல்லாம் வந்த்ருக்காங்க, அங்க இங்க நகரமுடியல்ல, வீட்டுக்கு வந்து குளிச்சிட்டு ஹாஸ்பிடலுக்கு போறேன்,”என்றான் சிகரெட்டை இழுத்தப்படி.
“வாயேன் ஆட்டோவில் போலாம், நானும் அங்க தான் போறேன், லேசா ஜுரமா இருக்கு மாத்திரை வாங்கணும், “, என்றான் நந்தன் போலியாக இருமியப்படி. கடந்து சென்ற ஆட்டோவை கை காட்டி நிறுத்தி இருவரும் ஏறினர்.
“என்ன பீட்டர் கொலையா தற்கொலையா,”என்று வேடிக்கை பார்த்தப்படி கேட்டான் நந்தன்.சிகரெட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சற்று அவனது குரல் தாழ்த்தி,” சார், யார் கிட்டேயும் சொல்லாதீங்க சார், கொலை தான், கழுத்துல கயிறு போட்டு இருக்குன தடம் இருக்கு,சாகும் போது போராடியிருக்காருன்னு டாக்டர் சொன்னார், ஆனா ரிப்போர்ட்ல தற்கொலைன்னு கொடுத்திட்டாங்க, எல்லாம் பெரிய இடத்து விவகாரம்சார்,” என்றுகூறிவிட்டு, ஹாஸ்பிடல் வளாகம் வந்ததும், “அதோ அந்த வலது பக்கம் போங்க சார் மாத்திரை தருவாங்க,” என்று கூறி விட்டு மார்ச்சுவரி நோக்கி ஓடினான்.
அப்படியே மார்ச்சுவரியை பார்த்தப்படி நின்றிருந்தான் நந்தன். மார்ச்சுவரி அருகே பள்ளி ஆசிரியர்கள் சூழ்ந்திருந்தனர்.மெல்ல அவர்கள் அருகே சென்றான் நந்தன்.அங்கே ஒருவர்,”விவேக் பிரதர் ஒருத்தர் ஈரோடுல இருக்கார் போல சார், அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன்க்கு தகவல் சொல்லியாச்சு, அனேகமா நாளைக்கு வந்திரணும்,” என்றார்.
விவேக்கை பார்க்க மனம் துடித்தாலும், அவனை கொலை செய்தவனை கண்டுபிடித்தப் பிறகு உடலை பெற்றுக் கொள்ளலாம் என்று மனம் கூற, விரைந்து வந்த வழி திரும்பினான்.
நந்தன் வந்த ஆட்டோ அங்கேயே நின்றது. “நீங்க போகலையா, நான் சில்லறை கொடுத்திட்டேனே ,”என்றான்.அதற்கு அவன் ,”ம்ம் கொடுத்துடீங்க,கொஞ்சம் வண்டில ஏறீங்களா பேசணும் ,”என்றான் ஆட்டோ டிரைவர். எங்கேயோ பார்த்த ஞாபகம், ஆனா எங்கேன்னு தெரியலேயே, என்று மனதுக்குள் கூறியபடி ஆட்டோவில் ஏறினான் நந்தன்.
விரைந்த ஆட்டோ ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் நின்றது. இருவரும் ஆட்டோவை விட்டு இறங்கினர். இறங்கிய ஆட்டோ டிரைவர் தான் அணிந்து இருந்த மங்கி குல்லாவை விலக்கி, நந்தனை பார்த்தான். இப்போது நந்தனுக்கு ஞாபகம் வந்தது. தான் வசிக்கும் காலனி அருகே யாமினியின் வீட்டில், என்று மனம் சொல்ல. அவன் அதை ஆமோதிப்பது போல், “நான் யாமினியின் அண்ணன்.,” என்றான்.
“ஆமா நீங்க யாரு, நேத்து நான் எங்க வீட்டுக்கருகில் இருக்கும் காலனியில் பார்த்தேன்,” என்றான் யாமினியின் அண்ணன். ‘ம்ம்.. நான் ஒரு வேலை விஷயமா இங்க வந்தேன்,”என்று இழுத்தான் நந்தன். “விவேக்கை தெரியுமா, அவரைப் பற்றி பேசிக் கொண்டு வந்தீங்க ,”என்று சந்தேகத்தோடு கேட்டான் யாமினியின் அண்ணன். உடனே நந்தன் அதை மறுப்பதுப்போல் ,”இல்ல எல்லாம் பேசிக்கிட்டங்களா ,அதான் விசாரித்தேன்,” என்றான்.
“அந்த பீட்டர் சொல்றது போல், என் தங்கச்சியின் கொலையையும் , தற்கொலைன்னு மாத்திட்டாங்கன்னு நினைக்கிறேன். அந்த பீட்டர விசாரித்தா தெரியும்”,என்று யாமினின் அண்ணன் கூற,தனக்கு ஒரு துணை கிடைத்த சந்தோஷத்தில் நந்தன், “நீங்க விருப்பப்பட்டா, நான் கூட வரேன், வாங்க போய் பீட்டர பார்போம்,”என்றான் நந்தன். “நீங்க வரீங்களா , உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே,”என்று கேட்டப்படி ஆட்டோவை ஸ்டார்ட் செய்தான் யாமினியின் அண்ணன்.
செல்லும் வழியில் பீட்டரின் குணம் அறிந்து, கொஞ்சம் ஆட்டோவை ஓரமா நிறுத்துங்க,” என்று கூறி ஒரு கடையின் வாசலில் , பிரியாணி அண்டா ஆவி பறக்க, விற்பனையும் சூடு பிடித்திருந்தது.அதை ஒரு பார்சல் வாங்கிக்கொண்டான்.அப்படியே அந்த கடை அருகில் உள்ள சந்தில் நுழைந்தான், வரும்போது மது பாட்டிலோடு வந்தான்.
அதைப் பார்த்த யாமினியின் அண்ணன்,”ஏன் சார் ஆஸ்பத்திரிக்கு போறோம், இப்ப இது எதுக்கு, சாப்பிடறதுன்னா இங்கேயே சாப்பிடலாமே,”என்றான்.”இது எனக்கில்லை, பீட்டருக்கு,” என்றான் நந்தன்.”ஓ..ஓ..சரி,சரி,”என்று தலையாட்டியபடி ஆஸ்பத்திரி நோக்கி ஆட்டோவை செலுத்தினான், யாமினியின் அண்ணன்.
ஆஸ்பத்திரி வளாகத்தில் , மதிய உணவு நேரமானதால் கூட்டம் அவ்வளவாக இல்லை.மார்ச்சுவரி நுழைவாயிலைப் பார்த்த நந்தன் நொறுங்கிப்போனான். அதை ஒதுக்கி இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொள்ள நினைத்து தோற்றுப் போனான், கண்களில் கண்ணீர் பெருக அப்படியே நின்ற நந்தனை யாமினியின் அண்ணன் கவனிக்க தவறவில்லை. தன் தோளில் ஒரு கை படவே ,திடுக்கிட்டு திரும்பிய நந்தன் ,யாமினியின் அண்ணன் தன்னை சந்தேகத்தோடு பார்ப்பதை புரிந்துக் கொண்டு,”கண்ணீரை துடைத்தப்படி, “நான் விவேக்கின் அண்ணன்,”என்றான்.
நந்தன் எதிர்பார்த்தப்படி, பீட்டர் மதிய உணவுக்கு யாரை ஸ்பான்சர் செய்ய சொல்லலாம் என்பது போல், சுற்றியும் முற்றியும் பார்த்தப்படி , கடைசி நிமிட கை விரலை சுடச் செய்ய போகும் பீடி துண்டை முடிந்தவரை இழுத்துக் கொண்டிருந்தான்.
யாமினியின் அண்ணன் தனது முகத்தை மங்கி குல்லா வில் மறைத்துக்கொண்டு, டிரைவர் சீட்டிலேயே அமர்ந்திருக்க, நந்தா தான் வாங்கிய உணவுப் பொட்டலத்தை நன்கு தெரியும்படி வைத்து, யாரையோ தேடுவது போல் பாவனை செய்துக் கொண்டிருந்தான்.
சட்டென்று நந்தாவை அடையாளம் கண்டுக் கொண்ட பீட்டர்,”சார் , என்ன இன்னும் மாத்திரை வாங்கிட்டு போலையா,” என்று கேட்டப்படி அருகில் வந்தான்.”என்ன பிரியாணி வாசனை ஆளை தூக்குது, யாருக்கு சார்,”என்று கேட்டப்படி பொட்டலத்தை ஏக்கத்தோடு பார்த்தான்.
தான் வைத்த தூண்டிலில் பீட்டர் சிக்கிக் கொண்டான் என்பதை உணர்ந்த நந்தன், என் நண்பனுக்கு வாங்கிட்டு வந்தேன், ஆளக் காணோம், நீங்க சாப்பிடுங்களேன்,”என்று அவனிடம் நீட்ட, தான் எதிர்பார்த்த ஸ்பான்சர் கிடைத்த சந்தோஷத்தில்,”அதுக்கென்ன சார் சாப்பிட்ட போச்சு,”என்றான்.
உணவுப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறிய நந்தன், பொட்டலத்தை பிரித்து சாப்பிடுவதற்கு ஏதுவாக விரித்து வைத்தான், அருகில் தண்ணீர் பாட்டிலையும் வைத்தான்.பிரியாணியை ஆசையோடு பார்த்தப்படி உண்ண துவங்கினான் பீட்டர்.
“ஆமா, பீட்டர், காலையில பார்த்த கூட்டத்தை காணோம், என்னாச்சி,”என்று மெல்ல ஆரமித்தான் நந்தன். முட்டையை லபக்கென்று முழுங்கிய பீட்டர், சற்று சிரமத்தோடு,”அதுவா சார், விவேக் வீட்டிற்கு தகவல் கொடுத்திருப்பாங்க, அநேகமா நாளைக்கு வந்து பாடியை வாங்கிடு வாங்க சார்,”என்றான்.
“அப்புறம் பீட்டர், அந்த யாமினி பொண்ணும் தற்கொலை தான் பண்ணிக்கிட்டா,ஆனா வெளியில எல்லாம் அந்த பொண்ணு ரொம்ப தை ரியமான பொண்ணுன்னு சொல்றாங்க, நீ என்ன நினைக்கிற,” என்று அடுத்த கேள்வியை கேட்டப்படி, குவாட்டர் பாட்டிலை,அவன் பார்வைக்கு தெரியும்படி எடுக்க, பதில் சொல்ல யோசித்தவன், கண்கள் மிளிர பாட்டிலை பார்த்தவன்,” ஆமா சார் தற்கொலைன்னு தான் சொன்னாங்க, போஸ்ட் மார்ட்டம் பண்ணும்போது கவனிச்சேன் சார் , விவேக் சார் கழுத்துல இருந்த மாதிரி கயிறு வைச்சு இறுக்குன மார்க் இருந்தது, கொன்னுட்டு தான் கிணத்துல போட்டிருக்கணும் சார், அதையும் விவேக் சார் கதை மாதிரி மாத்திட்டாங்க, ஆளும் க்ளோஸ், கேஸ்ம் க்ளோஸ், போலீஸ்க்கு வேலையும் மிச்சம், ஆனா சார் இரண்டையும் செஞ்சது ஒரே நபர் தான், அது மட்டும் உறுதி, என CBI ஆபீசர் மாதிரி சொல்லி விட்டு லெக் பீஸை சுவைக்க துவங்கினான்..
ஆட்டோவின் ஸ்டீரிங்கைப் பிடித்திருந்த யாமினியின் அண்ணனின் கைகள் ஸ்டீரிங்கை இருக்கின.ஆத்திரம் தாங்காமல், ஆட்டோவை விட்டு வெளியே ஒரு மரத்தின் அருகே சென்று மரத்தை குத்தினான்.
இதை கண்ட நந்தன் , இனி CIயை கவனித்தால் விடைகிடைக்கும் என்று நினைத்து கொண்டான். பீட்டர் சாப்பிட்டு விட்டு, தனது பங்கான குவாட்டர் பாட்டிலியும் எடுத்துக் கொண்டு ,”சார் நீங்க யாருனே தெரியல, ஆனா காலையிலிருந்து ரொம்ப நெருக்கமாயிடீங்க, ஏதாவது உதவின்னா கேளுங்க சார்”, என்று கூறிவிட்டு, மார்ச்சுவரி நோக்கி சென்றான்.
அவன் சென்றதும் யாமினியின் அண்ணன், நந்தனை ஏற்றிக் கொண்டு, வேகமாக ஒரு ஆள் அரவமற்ற பகுதிக்கு சென்றான். ஆட்டோவை விட்டு இறங்கிய நந்தன் துக்கம் தாங்காமல் வாய் விட்டு கதறி அழுதான், ஏன், எதற்கு என்று கேட்க எத்தனிக்கையில் யாமினியின் நினைவால் அவனும் அழுதான்.
இருவரும் அழுது தீர்த்து ஒரு சமயத்தில் அமைதியாயினர்.அப்போது நந்தனின் அலைபேசி அழைத்தது, எடுத்து “ஹலோ”, என்றான்.”யாரு விவேகனந்தனா, நாங்க ஈரோடு போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து பேசறோம், எங்க போய்டீங்க வீடு பூட்டியிருக்கு, ஒரு செய்தி......,”என்று விவேக்கின் மறைவை தெரிவித்த,அந்த குரல் ,”அப்புறம் ஊட்டி அரசு மருத்துவமனையில் போய் உங்க ID காண்பித்து அவர் உடலை பெற்றுக் கொள்ளுங்கள்,” என்று கூரியது.
தெரிந்த விஷயம் தான் என்றாலும்,வேறொருவர் கூறும்போது ,வேதனை அதிகம் ஆகியது. அலைப்பேசியை ஜிப்பாவில் வைத்தான், தனது முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டு நிமிர்ந்த போது, யாமினியின் அண்ணன், “சொல்லுங்க அந்த CI யை என்ன செய்யலாம், “என்றான்.
“கொலையை தற்கொலைஆக நாமும் மாத்துவோம்”, என்று தீர்க்கமாய் கூறினான் நந்தன் யாமினியின் அண்ணனை பார்த்து. எந்த வித அதிர்வையும் காட்டாமல்,”எப்படி “, என்றான் யாமினியின் அண்ணன். பின்பு அவனே,”இப்போ மணி ஒண்ணேமுக்கால் அந்த CI, மதிய உணவு முடிச்சிட்டு ஒரு குட்டி தூக்கம் போடுவது வழக்கம், அதை மாத்தவேமாட்டான்,இப்ப அவனுடைய வீட்டில் தான் இருப்பான், வாங்க போகலாம்,” என்று கூறியப்படி ஆட்டோவின் இருக்கையை சற்று சிரமப்பட்டு தூக்கி, ஒரு பெரிய வடம் போல் உள்ள கயிறை எடுத்து டிரைவர் சீட்டில் தான் கால் வைக்கும் இடத்தில் போட்டான்.
இவனது செயலை புரியாமல் நந்தன் பார்க்க, அதைப் புரிந்துக்கொண்ட யாமினியின் அண்ணன்,”இந்த மலைப் பாதையில் வண்டி சிக்குனா, இந்த கயிறை போட்டுத்தான் இழுப்பேன் சார்”, என்று சூட்சுமம் ஆகா கூறி சிரித்தான். அதைப் புரிந்துக் கொண்ட நந்தன் அவனது மங்கி குல்லாவை எடுத்து மாட்டிக்கொண்டான்.
சரியாக 2:10 ஆட்டோவை போலீஸ் குவார்ட்டர்ஸ் வாசலுக்கு சற்று தள்ளி ஒரு புதர் அருகே நிறுத்தி விட்டு, இருவரும் ஒரு முறை நோட்டமிட்டனர், மதிய நேரம் சாலை வெறிச்சோடி இருந்தது. இருவரும் அவரவர் குல்லாவை சரி செய்துக்கொண்டனர். யாமினியின் அண்ணன் கயிறை ஒரு பையில் போட்டுக்கொண்டான்.
ஆட்டோவில் வரும் போதே கொலையை தற்கொலை ஆக மாற்ற பிளான் செய்திருந்தனர், வீட்டின் படுக்கை அறையில் உண்ட மயக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் CI.வாசலில் போலீஸ் ஜீப்பில் டிரைவர் ஸ்டீரிங்கில் கவிழ்ந்திருந்தான். ஏற்கனவே பலமுறை வீட்டிற்கு வந்ததால், யாமினியின் அண்ணன் மிகவும் இயல்பாக நடந்துக் கொண்டான்.
சின்ன சிரமங்களுக்கு பிறகு CIயின் பின் புற வாயில் கதவு திறந்துக் கொண்டது. இருவரும் சத்தமின்றி உள்ளே புகுந்தனர். கட்டிலின் அடியில் நந்தன் ஒளிந்துக் கொண்டான். கயிற்ருடன் யாமினியின் அண்ணன் தயக்கம் எதுவும் இல்லாமல் உறங்கும் CI யை தட்டி எழுப்பினான். உறக்கம் கலைந்த அவன் யாமினியின் அண்ணனை மக அருகில் பர்ஹ்ததும், சற்று அதிர்ந்து பின்பு சுதாரித்துக்கொண்டு,”ஏய், நீ என்ன இங்க, எப்படி உள்ள வந்த “, என்றப்படி எழ முயற்சி செய்தான்.
சட்டென்று கட்டிலுக்கடியில் இருந்த நந்தன் வெளியில் வந்து CI யின் காலை கெட்டியாக பிடித்துக் கொண்டான். யாமினியின் அண்ணன் தனது கையுறை அணிந்த கையில் CI யின் முழுமையாக லோட் செய்த பிஸ்டலை CIயின் நெற்றியில் வைத்தான். காலையில் தான் புல்லாக லோடு செய்ததை உணர்ந்த CI அப்படியே உறைந்து போனான்.”டேய் உனக்கு என்ன பைத்தியமா, நா உன் மாமாடா”, என்று அவனுக்கு ஒரு முறை நினைவூட்டினான்.
“தெரியும் என் யாமினிய என்ன செஞ்ச,” என்றான். “அவ தான்,கிணத்துல குதிச்சி தற்கொலை பண்ணிக்கிட்டாளே”, என்றான் சற்று தயக்கத்தோடு. அதை கேட்ட மாத்திரத்தில் ஆத்திரத்தில் அருகிலிருந்த தலையணையை எடுத்து CI வயிற்றில் வைத்து அழுத்தி, அதன் மேல் துப்பாக்கியை வைத்து பலமாக அழுத்த, “டேய்,டேய் என்ன ஒன்னும் செஞ்சிடாத, இ ..இ இவன் யாரு?” என்று CI அச்சத்தோடு கேட்க ,” ம்ம்... விவேக் ஞாபகம் இருக்கா அவன் அண்ணன்,இப்ப சொல்லலாமே”, என்றான் யாமினியின் அண்ணன் சற்று நக்கலோடு.
துப்பாக்கியின் அழுத்தத்தை மேலும் உணர்ந்த CI,” எச்சிலை கூடி முழுங்கியவாறு ,”அன்னைக்கு நீ, அக்கா ,மாமாவும் குகை கோவிலுக்கு போனீங்க, வயித்து வலி காரணமா யாமினி வீட்டில இருந்தா, அத தெரிஞ்சிட்ட நா உங்க வீட்டுக்கு வந்தேன்.அப்போ யாமினிய என்னை கல்யாணம் பண்ணிக்க வற்புறுத்தினேன்,ஆனா அவ,விவேக் அவுங்க அண்ணன் சம்மதம் வாங்க ஊருக்கு போயிருப்பதாகவும், அவன் வந்ததும் இருவரும் திருமணம் செய்துக்க போவதாகவும் சொன்னாள்.”
“நான் ஏற்கனவே விவேக் டீ கடைக்காரரிடம் ஊருக்கு போற விஷயத்தை சொல்றத கேட்டேன். அதனால ஆத்திரத்தில் அவள அடிச்சேன்,அவ என் மூஞ்சில காரி துப்பினா, ஆத்திரம் தாங்காம பக்கத்துல இருந்த கயித்துல அவ கழுத்த நெறிச்சேன் , அவ செத்துட்டா ,சரி தற்கொலை மாதிரி செட் பண்ணிரலாம் என்று நினைத்து, அவள கிணத்துல தூக்கிப்போட்டேன்,”என்று தயங்கி தயங்கி சொல்லி முடித்தான்.
“சரி விவேக்கை என்ன செய்த,”என்று நந்தன் காலை மேலும் இருக்க, யாமினிய பார்க்க வருவதற்கு முன்பே “ஊருக்கு போன விவேக்கை தொடர்ந்து ரயில் நிலையம் சென்றேன், அவன் யாருக்கோ போன் செய்தான், பின்பு தனது பெட்டியை எடுத்துக் கொண்டு கம்பார்ட்மென்டில் ஏறினான். ரயில் கிளம்பியதும் கொண்டு சென்ற கயிற்றை கொண்டு விவேக்கின் கழுத்தை நெரித்து, அந்த கம்பார்ட்மெண்டிலேயே தூக்கு பொட்டு தொங்குவது போல் செட் செய்தேன், பின்பு அவனது லக்கேஜ் யை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்தேன், அவனது கைப்பேசியை சுவிட்ச் ஆப் செய்து அதையும் தூக்கிப் போட்டேன். வேலையை முடித்துவிட்டு அடுத்த ஸ்டேஷனில் இறங்கிக்கொண்டேன்,” என்று கூறி முடித்தான்.அதை அனைத்தையும் CI யின் அலைபேசியில் ரெகார்ட் செய்த யாமினியின் அண்ணன்.
கொண்டு வந்த கயிற்றை கொண்டு CIயின் கழுத்தை இறுக்கினான், “ஆனால் தினமும் நிம்மதியின்றி...”, என்று CI சொல்லி முடிப்பதற்குள், அவனது உயிர் பிரிந்தது.பேச்சு சத்தம் கேட்டு ஜன்னல் அருகே வந்த டிரைவர் நடந்ததை பார்த்து விட்டு,ஒன்றும் நடவாதது போல் சென்று ஜீப்பில் ஏறி அமர்ந்துக் கொண்டான்.
உயிர் பிரிந்ததை உறுதி செய்துக் கொண்டு, அவனை மின் விசிறியில் கட்டி தற்கொலை செய்துக் கொண்டது போல் செய்து விட்டு, வந்த வழியில் வெளியே வந்தனர். இவை அனைத்தையும் அறிந்துக் கொண்ட ஜீப் டிரைவர் அவர்கள் சென்றதை உறுதி படுத்திக் கொண்டு , தனது பாக்கெட்டில் உள்ள சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். தனது கடிகாரத்தை பார்த்தான், மணி சரியாக 3;௦௦ என்று சொல்ல, ஜன்னல் அருகே சென்று,” சார் சார்” என்று அனைவரும் கேட்கும்படி அலறினான்.
யாமினியின் அண்ணனும், நந்தனும் அங்கிருந்த டீ கடையில் நிதானமாக டீ குடித்துக் கொண்டிருந்தனர். பின்பு அவரவர் வீடு சென்றனர். கதைக்கான கரு கிடைத்ததை உணர்ந்த நந்தன், பிள்ளையார் சுழி போட்டு எழுத துவங்கினான். இரவு பத்து மணி இருக்கும், கதவு தட்டும் ஓசை எழ, முழுவதுமாக கதையில் மூழ்கியிருந்த நந்தன், சற்று திடுக்கிட்டு கதவை திறந்தான். அவனது மொபைல் சர்வீஸ் நண்பன் கண்ணீரோடு நின்றிருந்தான்.அவன் உள்ளே வந்ததும் கதவை தாளிட்டு, நாற்காலியில் வந்து அமர்ந்தான் நந்தன்.”டேய், விஷயம் தெரியுமா, நா தான் ஈரோடு போலீஸ்க்கு உன் நம்பரை கொடுத்தேன்,”என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.
நந்தாவிடம் எந்த ஒரு சலனமும் இல்லை.மறு நாள் காலை, தன் நண்பனோடு மார்ச்சுவரி சென்று பார்மாலிடீஸ் முடித்து , விவேக்கின் பாடி வாங்கி, அருகிலுள்ள கிரிமேஷன் மையத்தில் அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்தான்.
ரூம் வந்து உரிமையாளரிடம், தான் விவேக்கின் அண்ணன் என்பதை கூறி, அவனது உடைமைகளை வாங்கிக் கொண்டு, ரூம் காலி செய்து, அவனது நண்பனுடன் வெளியில் வந்தான். யாமினியின் அண்ணன்,ஆட்டோவை கேட் அருகே நிறுத்தி அவர்களை ஏற்றிக் கொண்டான்.
அப்போது நந்தாவின் அலைப்பேசி அழைக்க, அஆங்.. சார் கதை ரெடி இரண்டு எபிசோடுகள் உங்க மெயிலுக்கு அனுப்பிட்டேன், ஆங் தீம் வந்து மர்டர், ரிவெண்ஜ் சார், நம்ம நேயர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் சார்,” என்று கூறி விட்டு குலுங்கி அழத் துவங்கினான்.
Comments
Post a Comment