எல்லாம்
நன்மைக்கே
“என்ன ஜென்னி கிறிஸ்மஸுக்கு வீட்டுக்கு போகலையா ஹாஸ்டல்ல தான் இருக்க போறியா,ஏதோ இந்த வருஷம் தொடர்ந்து ஒரு வாரம் லீவு கிடைச்சிருக்கு மிஸ் பண்ணாதடி போயிட்டு வா, ஒரு பெரிய வங்கியில் உதவி மேலாளராக இருக்க நீ பிறந்து வளர்ந்த வீட்ல போயி தங்க என்ன தயக்கம் பக்கத்துல உதவிக்கு ஆள் இருக்காங்க, போடி போய் தைரியமாக இருந்துட்டு வா, இப்படி ஹாஸ்டல் ரூமிலேயே அடைந்து இருக்காதே ஜென்னி ,இப்ப வரப்போற நியூ இயர்ல நான் ஒரு தைரியமான தன்னம்பிக்கையான ஜென்னியை பார்க்கணும் புரியுதா பை ,எனக்கு பஸ்சுக்கு லேட்டாயிடுச்சு கிளம்புறேன் அட்வான்ஸ் ஹாப்பி கிறிஸ்மஸ் அண்ட் ஹாப்பி நியூ இயர் வரேன் அடுத்த வருஷம் பார்ப்போம்,” என்று கூறி செல்லமாக கன்னத்தை தட்டி சென்றாள் அர்ச்சனா. இவள் அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறாள்.
“அர்ச்சனா ரொம்ப துணிச்சலான பொண்ணு எப்படி இவ்வளவு தைரியமா இருக்கா, அவளுக்கு என்ன அவ அப்பா அம்மா கூட இருக்காங்க, அதனால தைரியமா இருக்கா,” என்று ஜென்னி நினைத்துக்கொண்டாள். சரி இந்த தடவை லீவுக்கு ஊருக்கு போயிட்டு வருவோம் ஆனால் அம்மா இல்லாத அந்த வீட்ல எப்படி இருக்க போறோம் என்று நினைத்தபடி ஊருக்கு கிளம்ப தயாரானாள் ஜென்னி.
ஜென்னி, வயது இருபத்தி நான்கு அழகுக்கு பஞ்சமில்லை இடுப்புக்கு கீழே தவழும் தன் அழகிய கூந்தலை அழகாக எண்ணெய் வைத்து சீவி பின்னி போடுவது தான் வழக்கம். அது அவளது அம்மாவின் கட்டளை. காட்டன் புடவை அல்லது சுடிதார் துப்பட்டா போடாமல் இருந்தது இல்லை, இதுவும் அவளது அம்மாவின் அன்பு கட்டளை.
ஜென்னி தாய் தந்தையோடு சேலத்தில்
வசித்துவந்தாள். ஜென்னி தந்தையின்
பூர்வீகம் ஏற்காடு. அங்கு ஒரு ரம்மியமான சூழலில் அழகிய தோட்டம் சூழ ஒரு தனி
வீடுதான் சொத்து. ஜென்னியின் தந்தை சேலம் வங்கியில் மேனேஜராக பணியாற்றி வந்தார்,
அப்போது ஜென்னிக்கு வயது 15 இருக்கும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு
தயாராகி கொண்டிருந்தாள். நன்கு பேசி சிரித்து தன்னை பள்ளியில் விட்டுச்சென்ற அப்பா
மாலையில் பிணமாக வீடு வந்தார், கேட்டால் மாரடைப்பு என்றார்கள்.
ஜென்னியும் அவளது அம்மா கிறிஸ்டியும் செய்வதறியாமல் தவித்தார்கள். அம்மாவோ அதிகம் படிக்கவில்லை. அவளது கணவனின் வேலை
கிடைப்பதற்கு சாத்தியமில்லை. ஜென்னி படித்தால் மட்டுமே அது சாத்தியம். ஆனால் ஜென்னியோ
மிகவும் பயந்த சுபாவம் உடையவள் எதற்கெடுத்தாலும்
பயம், எதைப் பார்த்தாலும் பயம். செய்வது
அறியாமல் தவித்தாள் கிறிஸ்டி.
ஜென்னியை ஒரு ஹாஸ்டல் வசதி உள்ள பள்ளியில் பதினொன்றாம்
வகுப்பு சேர்த்துவிட்டு, தன் கணவனின் சொந்த ஊரான ஏற்காட்டில் குடி ஏறினாள்
கிறிஸ்டி.ஆனால் விட்டு சென்ற ஒரு வாரத்திலேயே பள்ளியிலிருந்து போன், ஜென்னி
மிகவும் பயந்து இருக்கிறாள் மேலும் ஜுரம் அதிகரித்து இருப்பதால் வந்து கூட்டிச்
செல்லுமாறு கூறினார்கள்.
கிறிஸ்டி வேறுவழியில்லாமல் ஜென்னியை ஏற்காடு வீட்டிற்கு கூட்டி வந்து அருகில் உள்ள பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்க வைத்தாள். மாலை வீடு திரும்பியதும் வீட்டு வேலைகள் சமையல் வேலை என்று அனைத்தையும் தன் தாயிடம் கற்றுக் கொண்டாள் ஜென்னி.
கிறிஸ்டி தன் கணவனின் இறப்பிற்கு பின் வந்த ஒரு தொகையை வைத்து ஒரு சிறிய பேக்கரியை தொடங்கி ஓரளவுக்கு பொருளீட்டி தனது மகள் ஜென்னி பெயரிலும், தனது பெயரிலும் மாதாமாதம் சேமித்து வந்தாள்.
ஜென்னி பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றாள். ஓரளவுக்கு தன்னம்பிக்கையுடன் காணப்பட்டாள். அதனால் அவளை சேலத்தில் உள்ள ஒரு பெரிய கல்லூரியில் மேற்படிப்பு படிக்க வைத்தால் கிறிஸ்டி ஹாஸ்டல் வாசம் தான், வேறுவழியில்லை தந்தையின் வேலை பெற்று வாழ்ந்து காட்ட வேண்டும் என்று தன் தாய் தினந்தோறும் கூறியது ஞாபகம் வர இளநிலை படிப்பை முடித்தாள் ஜென்னி.
ஏற்காட்டுக்கு விடுமுறைக்கு வந்த ஜென்னி, தன் தாயைக் கண்டதும் முதுநிலை படிப்பில் நாட்டம் இல்லாமல் அங்கேயே இருப்பேன் என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தாள். அவளை வலுக்கட்டாயமாக கொண்டுபோய் முதுநிலைப் படிப்பில் சேர்த்துவிட்டு வந்த கிறிஸ்டி ஒரு முடிவுடன் ஏற்காட்டுக்கு வந்தாள்.
இடையில் விடுமுறைக்கு வந்த
ஜென்னிக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவளது தாய் தன்னை தேடவேண்டாம் என்று கூறி
ஒரு துண்டு சீட்டில் எழுதி வைத்து விட்டு, வீட்டை பூட்டி சாவியை அருகே ஒரு தோட்டத்தில்
காவல் செய்யும் தாத்தா வீரையனிடம் கொடுத்துவிட்டு சென்றிருந்தாள், கூடவே தான்
வளர்த்து வந்த நாய் ஹை டியை ஒப்படைத்துவிட்டு சென்றிருந்தாள் கிறிஸ்டி.
ஜென்னி குழம்பிப்
போயிருந்தாள் தாயின் முடிவுக்கு காரணம் அறியாமல் தவித்தாள், வீரையன் தாத்தாவும்
தனக்கு தகவல் எதுவும் தெரியாது என்று கூறி
விட்டார். வீட்டில் தனியாக இருப்பது ஜென்னிக்கு கொடுமையாக இருந்தது. ஒரு வழியாக
விடுமுறையை கடத்திய ஜென்னி, தன் தாய் இல்லாத அந்த வீட்டை வெறுத்து சேலம் வந்தாள்.
பேங்க் எக்ஸாம் கோச்சிங்
கிளாஸ்க்கு சேர்ந்தாள். பகுதிநேரமாக 10th 11th 12th மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தாள். கடுமையாக உழைத்தாள், படித்தாள்,
முதல் அட்டெம்ப்டில் பேங்க் எக்ஸாம்
கிளியர் செய்து தன் தந்தையின் வேலையை கைப்பற்றினாள் ஜென்னி. ஆறு மாதம்
கடந்துவிட்டது தான் வேலை செய்யும் வங்கியின் மேலாளர் இடம் சக பணியாளர்கள் இடமும்
நல்ல பெயரும் பெற்றாள். ஆனால் தன் தாயின் மீதான வெறுப்பு மட்டும் குறையவில்லை.
தன் வாழ்க்கையை ரீவைண்ட்
செய்து முடிக்கவும், “ஏற்காடு உங்களை அன்புடன் வரவேற்கிறது,” என்ற போர்ட் கண்ணில் தென்படவும் சரியாக இருந்தது, பழகிய ஊர்தான்
என்றாலும் சற்று தயக்கத்துடனேயே பேருந்தை விட்டு இறங்கினாள் ஜென்னி.
பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியே
வந்து,” ஆட்டோ,” என்றாள் ஜென்னி. ஒரு
ஆட்டோ அருகில் வர லக்கேஜ் உள்ளே வைத்து தன் கைப் பையுடன் ஏறி அமர்ந்தாள். வீடு
வந்தது ஏற்கனவே தொலைபேசியில் தாத்தாவிடம் தன் வருகையை தெரிவித்து இருந்ததால்
வீட்டை சுத்தம் செய்து நாய் ஹைடியுடன் காத்திருந்தார் தாத்தா.
ஜென்னியை கண்ட தாத்தா, தன் புகையிலைப் பற்கள்
தெரிய,” பாப்பா வா இப்பவாவது வர வழி
தெரிஞ்சுதே, நான் பெட்டியை எடுத்துட்டு வரேன் நீ உள்ளே போ,” என்றார்
சந்தோஷத்தோடு. தன்னை வரவேற்க இரண்டு ஜீவன்கள் இருப்பதை இத்தனை நாள் மறந்து விட்டோமே
என்ற குற்ற உணர்வில் ஹைடியுடன் வீடு நோக்கி நடந்தாள்.
உள்ளே சென்ற ஜென்னிக்கு மிகவும்
அதிர்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.” தாத்தா எப்படி நான் வைத்திருந்த
பொருட்களை அதே இடத்தில் வைத்து சுத்தம் செய்து இருக்கீங்க, சூப்பர் தாத்தா,” என்ற
சந்தோஷத்தோடு கூறினாள். புன்னகைத்தப்படி பெட்டிகளை அவள் அறைக்கு கொண்டு சென்றார் தாத்தா.” தாத்தா நான் சொன்ன லிஸ்ட் படி சமையல்
பொருட்களை வாங்கிட்டீங்களா,” என்றாள் ஜென்னி.
நன்கு குளிர்ந்த நீரில்
குளித்து விட்டு நேரே அடுப்படி சென்று ஒரு சூடான டீ கப்போடு வெளியே வந்தாள்
ஜென்னி. ஹைடி ஒரு பூனையோடு செல்ல சண்டை
போட்டுக் கொண்டிருந்தது வெளியே வந்து டீ அருந்திய ஜென்னிக்கு, ஓவனில் இருக்கும் தேங்காய் பிஸ்கட் மணம் காற்றில்
கலந்து வந்தது தனக்கு மிகவும் பிடித்த பிஸ்கட்.
ஹாஸ்டலில் இருந்து வீட்டில்
நுழையும் போது அம்மாவுக்கு முன்பே இந்த
நறுமணம் வரவேற்கும். ஆசையாக அம்மா செய்து வைத்திருப்பாள், அருகில் யார் பேக்
செய்கிறார்கள் இந்நேரம் அம்மா இருந்திருந்தால் நிச்சயம் இந்த பிஸ்கட் இல்லாமல் டீ கொடுக்க மாட்டாங்க என்று நினைத்துக் கொண்டாள் ஜென்னி.
மாலை நாலரை மணிக்கே பனியின்
நிமித்தம் இருட்ட தொடங்கியது. இரவு உணவு ஞாபகத்திற்கு வர அடுக்களைக்குச் சென்று
தனக்கு பிடித்த உணவுகளை சமைக்கத் தொடங்கினாள் ஜென்னி. ஏழரை மணிக்கு தாத்தா வர ஹைடியுடன்
சேர்ந்து உணவு உண்ணத் துவங்கினர். உணவின் சுவை தன் தாயை ஞாபகப்படுத்த சிந்தனையுடன்
உணவருந்தினாள் ஜென்னி. தாத்தாவும் எதுவும் கூறாமல் உணவருந்தி
முடித்தார். உணவு உண்டு தாத்தா எழுகையில் தான் ஜென்னி சிந்தனை கலைந்தாள்
“ஐயோ! தாத்தா அதுக்குள்ள எழுதுட்டீங்க, நான் ஏதோ நினைப்புல உங்கள
கவனிக்கலையே மன்னிச்சிடுங்க,” என்றாள் ஜென்னி. “இல்ல பாப்பா வயிறும் மனமும் திருப்தியா
இருக்கு, நல்ல சாப்பாடு,” என்று கூறிவிட்டு வெளியே சென்று அமர்ந்துகொண்டார். ஜென்னி
கைகழுவி அனைத்தையும் ஒழுங்குபடுத்தி விட்டு வெளியே வந்து அமர்ந்தாள்.
தாத்தா ஏதோ சிந்தனையோடு பீடி
புகைத்துக் கொண்டிருந்தார். “என்ன தாத்தா பலமான யோசனை, சாப்பாடு எப்படி இருந்தது?”
என்றாள் ஜென்னி.” அப்படியே உங்க அம்மா
கையால சாப்பிட்ட மாதிரி இருந்தது,” என்று கூறிவிட்டு,” பாப்பா! இதை கொடுக்க
மறந்துவிட்டேன்,” என்று,” இந்தா, உனக்கு பிடித்த தேங்காய் பிஸ்கட்,” என்று ஒரு
பேப்பர் பையை ஜென்னியின் கையில் கொடுத்தார்.
“ நான் சாயந்திரமே கேக்கலாம்னு இருந்தேன் தாத்தா, பக்கத்துல ஏதாவது
பேக்கரி இருக்கா, நல்ல வாசனை வந்தது,” என்று கூறியபடி கவரில் இருந்து பிஸ்கட்டை
எடுத்து ஒரு கடி கடித்தாள் அப்படியே கண்களில் கண்ணீர் குளம் கட்டியது தாய்
நினைவுக்கு வந்தாள்.” தாத்தா அப்படியே அம்மா செய்தது போல இருக்கு,” என்று கூறி முகத்தை
மூடி அழத் தொடங்கினாள் ஜென்னி. கதறியழும் ஜென்னியை சமாதானம் செய்ய முடியாமல் பார்த்துக்கொண்டே
இருந்தார் தாத்தா.
“ஏன் அம்மா இப்படி செஞ்சாங்க, என்னை விட முக்கியமான விஷயம் என்ன
இருக்கு அவங்க வாழ்க்கையில, அப்ப நான் முக்கியம் இல்லையா”, என்ற முகத்தை மூடி அழுதாள்
ஜென்னி. சமாதானப்படுத்த வழி தெரியாமல் தவித்தார் தாத்தா. “எல்லாம் சரியாயிடும்
பாப்பா, இப்போ நீ தைரியமா டவுன்ல தங்கி வேலைக்கு
போயிட்டு வர, பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு, இன்னைக்கு பாரு அம்மா
போலவே சமைச்சு இருந்த, ஒரு வீட்டை, ஒரு வங்கியை வழிநடத்தற அளவுக்கு தைரியமான, தன்னம்பிக்கையான ஜென்னிய தான் அம்மா
எதிர்பார்த்தார்கள், அது நடந்தது பாப்பா, இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன், அழாத
கதவை சாத்திட்டு பிரே பண்ணிட்டு தூங்கு
எல்லாம் நல்லதுக்குத்தான்,” என்று ஜென்னியின் தலையை கோதிவிட்டு மெல்லமாக வீடு
நோக்கி நகர்ந்தார் தாத்தா.
மடியில் புதைந்து அழுதுகொண்டிருந்த ஜென்னி, தாத்தாவின் வார்த்தைகளை
கேட்டு சற்று மனம் அமைதி அடைந்து கண்களை
துடைத்துவிட்டு, ஹைடியை அதன் படுக்கையில்
படுக்க வைத்து விட்டு உள்ளே சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.
மறுநாள்,கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கான அலங்காரங்களை தாத்தாவின் உதவியோடு செய்யத்
துவங்கினாள் ஜென்னி. பிஸ்கட்ஸ் மற்றும்
கேக்குகளை தயார் செய்தாள்,தாத்தாவுக்கு புத்தாடை வாங்கிக் கொடுத்தாள் சந்தோஷமாக
ஏற்றுக் கொண்டார் தாத்தா.தானும் ஒரு கிப்டு தருவதாக கூறிச் சென்றார்.
கிறிஸ்மஸ் அன்று காலை வாசலிலே ஒரு பெரிய வண்ணக் கோலம் போட்டிருந்தாள் ஜென்னி. அதிகாலையில்
அருகிலுள்ள சர்ச்சுக்கு ஹைடியுடன் சென்று வீடு வந்தாள். வீட்டு வாசலில் தாத்தா ஒரு
இளைஞருடன் நின்றிருந்தார் இருவரையும் வரவேற்று இனிப்புகளை கொடுத்தாள். பின்பு
தாத்தா,” ஜென்னி பாப்பா நீ தம்பியோடு பேசிக் கொண்டிரு, நான் சிறிது நேரத்தில்
வருகிறேன்”, என்று கூறி சென்றார். இருவரும் தங்களை அறிமுகம் செய்து நன்கு பேசத்
தொடங்கினர்.
அந்த இளைஞனின் பெயர், விக்டர் என்றும்,அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்து உரிமையாளரின் மகன் என்றும், சேலத்தில்
இன்ஜினியராக பணியாற்றுவதாக கூறினான். இதுவரை எந்த ஆணுடன் பேசாத ஜென்னிக்கு
விக்டரின் கண்ணியமான பேச்சும், பார்வையும் பிடித்திருந்தது.
விக்டரிடம் தன் தந்தையின்
சாயலை அவ்வப்போது பார்த்த ஜென்னி, நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தாள்.
விக்டருக்கும் ஜென்னியிடம் ஏதோ ஈர்ப்பு
ஏற்பட்டிருக்க வேண்டும் பல வருடங்களாக பழகிய நண்பர்கள் போல் பேசிக்
கொண்டிருந்தவர்கள், தாத்தா வருவதை கவனிக்க மறந்தனர் சூழ்நிலையை புரிந்து கொண்ட
தாத்தா, “ஹைடி,” என்று கத்த, இருவரும் சட்டென்று பார்வையை தாத்தாவிடம் நகர்த்தினர்.
தாத்தாவும் விக்டரும் விடைபெற, ஏதோ தன்னை விட்டு பிரிவதை உணர்ந்தாள் ஜென்னி. அடுத்தடுத்து இரண்டு நாட்கள் நகர
தாத்தாவிடம் விக்டரைப் பற்றி அடிக்கடி
கேட்டுக் கொண்டிருந்தாள் ஜென்னி. தாத்தாவும் ஒரு நமட்டு சிரிப்புடன் பதில்
சொல்லிக் கொண்டிருந்தார்.
முப்பத்தி ஒன்றாம் தேதி மாலை மலர் அலங்காரங்களை தாத்தாவின் உதவியோடு செய்து கொண்டிருந்தாள் ஜென்னி.”பாப்பா ,ஒரு வழியா அலங்காரங்கள்
முடிஞ்சுது, நீ நம்ம சர்ச்சில் நடக்க போற மாஸ்க்கு தயாரா இரு, விக்டரும் வருவார்,” என்ற அர்த்த சிரிப்போடு கூறினார் தாத்தா. கேட்ட மாத்திரத்தில் சந்தோஷமடைந்த
ஜென்னி தான் வாங்கி வைத்த புது ட்ரெஸ் ஐ போட்டுக்கொண்டு மாஸ்க்கு தயாரானாள்
ஜென்னி.
விக்டரை நினைக்கையில் மனம் பறந்து
கொண்டிருந்தது. அப்போது வாசலில் ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்த ஜென்னி, மாஸ் க்கு இன்னும் நேரம்
இருக்கிறதே ,தாத்தா அதுக்குள்ள வந்துட்டாரா, என்று நினைத்துக்கொண்டு கதவருகில்
வரும்போது, ஹைடியின் உற்சாக குறைப்பு சத்தம் கேட்டது. யாராவது தெரிந்த நபர்களை
பார்த்தால் தான் இப்படி கத்துவான், யாராக இருக்கும் என்று வாயிற் கதவின் திரையை விலக்கிப் பார்த்தாள் ஜென்னி, இருட்டில்
ஒரு உருவம் நிற்பதைக் கண்டாள்,நன்கு பரிச்சியப்பட்ட உருவம் என்பதை மனம் கூறியது.
இதயம் திக் திக் என்று அடித்தது, கையில் வந்து விழுந்து விடுவது போல்
அடித்துக்கொண்டது.
அப்படியே திகைத்து பார்த்துக் கொண்டிருந்த ஜென்னியை காலிங் பெல் ஓசை
கலைத்தது. வாசல் லைட்டை ஆன் செய்து மெல்ல கதவை திறந்தாள், ஹைடி மேலும் கீழும்
குதித்துக் கொண்டிருந்தது, அங்கே கையில் பூங்கொத்துடன் ஒரு பெரிய கேக் பாக்ஸ் உடன்
தன் தாய் கிறிஸ்டி வாயில் புன்னகையும் கண்களில் கண்ணீரோடும் நின்று கொண்டிருந்தாள்.
அவளது பின்னால் தாத்தா அதே
புன்னகையுடன் வந்து கொண்டிருந்தார்.” வாம்மா!” என்று அழைக்கலாமா, இத்தனை வருடம்
இல்லாத பாசம், இப்போது என்ன, எங்கு சென்றாள், யாருடன் சென்றாள் என்று மாறி மனம்
கேள்வி கேட்க உள்ளே வர சொல்ல விரும்பாமல் ஓடி தன் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள் ஜென்னி. இதை எதிர்பார்த்த கிரிஸ்டி உள்ளே வந்து அமைதியாக சோபாவில் அமர்ந்தாள்.
தாத்தா நிதானமாக சென்று,” ஜென்னி, ஜென்னி பாப்பா, கதவை திற நான் எல்லாத்தையும்
சொல்றேன்,” என்றார்.
இதைக்கேட்ட ஜென்னி, அப்போ தாத்தாவுக்கு எல்லாமே தெரிந்தும் தன்னிடம்
கூறவில்லையே என்ற ஆதங்கத்தில் கதவை திறக்க மறுத்தாள். சிறிது நேரம் கழித்து,” ஜென்னி
நான் விக்டர் வந்திருக்கேன் கதவைத் திற,” என்று கூற. விக்டரின் குரல் கேட்டதும் கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தாள் ஜென்னி.
அங்கே ஹைடி உட்பட அனைவரும் ஜென்னியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அங்கு தன் தாயைக் கண்டதும்
திரும்பவும் ஆத்திரமும் கோபமும் கண்ணீரும் பீரிட்டு வந்தது ஜென்னிக்கு. அதை கண்ட தாத்தா அவளை சோபாவில் அமர வைத்து தொண்டையை
கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.” ஜென்னி பாப்பா! நான் உன்ன சின்ன வயசிலிருந்து
பார்த்துட்டு வரேன், அப்பாவின் மறைவுக்குப் பின் உன் தாய்க்கு தைரியம் சொல்ல
வேண்டிய நீ ரொம்ப பயந்து போய் எல்லாத்துக்கும் உன் தாயை யே எதிர்பார்த்துக்
கொண்டிருந்த, உன் அம்மா அப்படியே உன்
தந்தையை நம்பி இருந்ததால, அவருக்கு பின்னாடி உன்னை ஆளாக்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க,
அந்த கஷ்டத்தை நீயும் பட கூடாதுன்னு தான் நீ இளநிலை முடித்ததும் உன்னை விட்டு விலகினாங்க,
அம்மா எங்கேயும் போகல என் வீட்டுக்கு பக்கத்துல பேக்கரி நடத்தி வந்தாங்க.
நீ அவங்க துணை இல்லாமல் துணிந்து சொந்த கால்ல நிக்கணும்னு தான் உன்ன
பிரிஞ்சி இருந்தாங்க. நீ அவங்களை பாக்கல, ஆனா அவங்க நீ படிக்கும் போதும், வேலைக்கு
போகும் போதும், உன்னை வந்து பார்த்தாங்க. நீ வேலை செய்யும் வங்கிக்கும் வந்து நீ வேலை செய்யும் அழகைப் பார்த்தாங்க.
எதையும் உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு சொன்னதுன்னால என்னால ஒன்னும் செய்ய முடியல
பாப்பா, எல்லாம் உன் நல்லதுக்கு தான் பாப்பா .” என்று கனிவாக கூறினார் தாத்தா.
“ஆமா ஜென்னி உன் டீடெயில்ஸ் பூரா, உங்க
அம்மா லாஸ்ட் வீக் எங்க வீட்டுக்கு வந்து
எங்க பேரன்ட்ஸ் கிட்ட பேசினாங்க, அதுக்கு அப்புறமா தான் நான் உன்னை பார்க்க
வந்தேன், நீ இப்போ ஒரு அசிஸ்டன்ட் பேங்க் மேனேஜர், இது முழுக்க உன்னோட
தன்னம்பிக்கைனால தான்,” நீ அம்மா கூட
இருந்திருந்தா இன்னும் டிபபென்டென்டாக தான் இருந்திருப்பே ஜென்னி, அதனாலதான் அம்மா
இப்படி செஞ்சு இருக்காங்க,” என்று பொறுமையாக விக்டர் விளக்கினான்.
ஜென்னி தன் தாயைப் பார்த்தாள், கிறிஸ்டி அழுதுக் கொண்டிருந்தாள் அதை பார்த்த ஜென்னிக்கு அழுகை பீறிட்டு வந்தது
வேகமாக சென்று, தன் தாயை கட்டி அணைத்துக்கொண்டாள். எத்தனை வருடம் ஆனது தன் தாயின்
வாசனையை நுகர்ந்து என்று மனம் கூற மேலும் இறுக்கினாள் ஜென்னி, கிறிஸ்டி தன் மகளைத்
தழுவிக்கொண்டாள்.
இருவரும் அழுது தீர்த்து கண்களை துடைத்துக் கொண்டு நிமிரும்
நேரத்தில், “சரி, சர்ச்சுக்கு போகலாம், மாஸ்க்கு நேரமாகிவிட்டது என்று விக்டரின்
தாய் தந்தையர் கையில் கிறிஸ்துமஸ் பரிசுடன் வந்தனர்
விக்டர் அவர்களை அறிமுகம் செய்து வைத்தான். “எல்லாருக்கும் இந்த
தாத்தாவோட இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,” என்று கூறிவிட்டு, “அப்புறம்
கிறிஸ்டி நம்ம விட்டு கல்யாணம் எப்ப சீக்கிரமா சொல்லு, அப்பதான் இந்த தாத்தா ஜென்னியோட புள்ளைய சீக்கிரமா கொஞ்சம்
முடியும்,” என்று கூறிவிட்டு, “வாங்க சர்ச்சுக்கு போகலாம்,” என்றார் ஜென்னியும் விக்டரும்
பரஸ்பர புன்னகை பகிர்ந்து கொண்டனர்.
Comments
Post a Comment